search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமகள் சோகம்"

    திருச்சியில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மலைக்கோட்டை:

    திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ் (வயது 31). இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் பணி எடுத்து செய்து வந்தார். இவருக்கும் மலைக்கோட்டை தாயுமானவர் தெருவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

    முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர். மணமகள் வீட்டார் அவர்களுடைய வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் தினேஷ் அவரது வீட்டின் மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் படுத்து தூங்கினார். இன்று காலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற இருந்ததால் அவரது தாய் மாடிக்கு சென்று தினேஷ் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை தட்டி அழைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை.

    இதைத்தொடர்ந்து உறவினர்கள் சென்று கதவை தட்டி அழைத்தனர். அப்படியும் அவர் வர வில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் தினேஷ் தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தினேஷ் தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    திருமணம் பிடிக்காததால் தினேஷ்தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தினேஷ் 10ம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளார். தன்னை விட அவர் அதிகம் படித்திருந்ததால் தினேஷ் ஒரு வித தயக்கத்துடன் இருந்துள்ளார். நேற்று வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் யாரிடமும் சரியாக முகம் காட்டி பேசாமல் இருந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்ததும் தூங்க செல்வதற்கு முன்பு அவரது தாயிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். அதன்பிறகு மாடிக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மணமகள் தன்னை விட அதிகம் படித்திருந்ததால் தாழ்வு மனப்பான்மை காரணமாக தினேஷ் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தினேஷ் திருமணத்தையொட்டி அவரது வீடே களை கட்டியிருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்காக வித விதமான உணவுகள் தயார் செய்யப்பட்டு வந்தது. அவர் தற்கொலை செய்ததால் களை கட்டியிருந்த திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

    ×